NIA Raid at Trichy Thuraiyur Explosive Factory | Trichy Insight
திருச்சி துறையூர் அருகே உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிவிரைவு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
மே 30, 2026: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டி.முருகப்பட்டி ஊராட்சி, மங்கப்பட்டி மலை அடிவாரப் பகுதியில் செயல்பட்டு வரும் 'வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று திடீரென தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் இரு கார்களில் வந்து அதிரடி சோதனையைத் தொடங்கியுள்ளனர். திருச்சி மாவட்ட அதிவிரைவு பாதுகாப்புப் படை போலீசாரின் துணையோடு இந்த தொழிற்சாலை வளாகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள், உள்ளே தீவிர சோதனையிலும் ஆவணங்கள் சரிபார்ப்பிலும் ஈடுபட்டு வருவதால் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த குறிப்பிட்ட வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி ஏற்பட்ட மிகக் கொடூரமான வெடிவிபத்தில் சிக்கி 19 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த பயங்கர விபத்தைத் தொடர்ந்து, மத்திய வெடிமருந்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த தொழிற்சாலை உடனடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டு தற்போது தற்காலிகமாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், இன்று திடீரென நாட்டின் மிக உயரிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ இங்கு வந்து முகாமிட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த வெடிமருந்து தொழிற்சாலையிலும் ஆய்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் தொழிற்சாலை வளாகத்திற்குள் அனுமதிக்க அதிகாரிகள் முற்றிலும் மறுத்துவிட்டனர். மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துச் சரிபார்த்ததுடன், அவர்களின் முகங்களையும் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துச் சென்றதால் செய்தியாளர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையின் பின்னணி என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
Hashtags: #TrichyInsight #TrichyNews #NIARaid #Thuraiyur #VetrivelExplosives #TrichyBreaking #EnforcementDirectorate #SecurityAlert #TrichyUpdates #TamilNaduPolice
Socials: Handles: @trichyinsight @trichyinsight