Trichy Bus Horn Noise & Mental Health Impact | Trichy Insight
திருச்சியில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே தனியார் பேருந்துகளின் அதீத ஹாரன் சத்தத்தால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
May 02, 2026. திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த அக்னி வெயிலில் அத்தியாவசிய தேவைக்காக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஏற்கனவே உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை மேலும் வதைக்கும் விதமாக சில பேருந்து ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக திருச்சியில் இயங்கும் தனியார் சிட்டி பஸ்களில் 90 சதவீத ஓட்டுநர்கள் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஹாரன் என்பது முன்னால் செல்லும் வாகனங்களுக்கு தங்கள் வருகையை உணர்த்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் திருச்சியில் பல தனியார் பேருந்துகளில் சட்டவிரோதமான அதிக சத்தம் கொண்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னால் இடம் இல்லாத போதும் தொடர்ந்து ஹாரன் அடித்து தள்ளுவது பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒருவிதமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது ஒரு வகையான மெண்டல் ஹராஸ்மென்ட் என்று மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே எரிச்சலில் இருக்கும் மக்கள் மீது இந்த அதீத ஹாரன் சத்தத்தை திணிப்பது அவர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்குகிறது. இந்த எரிச்சல் அவர்களது அன்றாட பணிகளையும் மற்றவர்களிடம் பழகும் விதத்தையும் பாதிக்கிறது. ஒரு நாள் முழுக்க யாரிடம் பேசினாலும் கோபமாகவே பேசும் நிலைக்கு இந்த சத்தம் அவர்களை தள்ளுகிறது. சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அவசரத்தில் அல்லது வேலையில் இருப்பார்கள் என்பதை பேருந்து ஓட்டுநர்கள் உணர வேண்டும்.
திருச்சியின் முக்கிய இடங்களான சத்திரம், சென்ட்ரல் மற்றும் தில்லை நகர் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் இந்த ஹாரன் அட்ராசிட்டி உச்சகட்டமாக இருக்கிறது. சிக்னல் விழுந்த சில வினாடிகளிலேயே இடைவிடாமல் ஹாரன் அடிப்பது பொதுமக்களின் நிம்மதியை குலைக்கிறது. போக்குவரத்து காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்டவிரோத ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
பேருந்து ஓட்டுநர்கள் மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். ஹாரன் உங்கள் கைக்கு அருகில் இருக்கிறது என்பதற்காக அதை தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாலையை பயன்படுத்தும் அனைவரும் சக மனிதர்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே திருச்சியின் போக்குவரத்து சூழல் ஆரோக்கியமானதாக மாறும். இது வெறும் சத்தம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல மக்களின் மனநலம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #NoisePollution #TrichyTraffic #MentalHealthAwareness #PrivateBus #SummerStress #TrichyCity #RoadSafety #TamilNews #LocalUpdates #VoiceOfTrichy
Socials: @trichyinsight @trichynews