திருச்சி மாரீஸ் தியேட்டர் மேம்பால பணி தாமதம் | Trichy Insight

திருச்சி மாரீஸ் தியேட்டர் மேம்பால பணி தாமதம் | Trichy Insight

திருச்சியின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான மலைக்கோட்டை மாரீஸ் தியேட்டர் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக மந்தமாக நடந்து வரும் நிலையில், பாலம் திறக்க இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

July 1, 2026: திருச்சி மாநகரத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான மலைக்கோட்டை பகுதிக்கு செல்வதற்கும், சத்திரம் பேருந்து நிலைய இணைப்பிற்கும் முக்கிய வழித்தடமாக இருப்பது மாரீஸ் தியேட்டர் ரயில்வே மேம்பாலம் ஆகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க பாலம் கடந்த 1866-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டுமானத்துடன் வெறும் 9 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளைக் கடந்த இந்த பழைய பாலம் முற்றிலும் பழுதடைந்ததை அடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்ட திருச்சி மாநகராட்சியும் ரயில்வே நிர்வாகமும் முடிவு செய்தன. இதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி புதிய மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கிய வேகத்தில், கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் சத்திரம், தில்லை நகர், மெயின் கார்டு கேட் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் தினசரி நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள். கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மாநகராட்சி நிர்வாகம் தனது பங்கிற்கு பாலத்தின் இருபக்க சாலைகள் அமைக்கும் பணிகளை முறைப்படி தொடங்கியது. ஆனால், திட்டமிட்டபடி பணிகள் வேகமாக நடக்காமல் ஆமை வேகத்தில் நகர்வது தான் திருச்சி மக்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்த மேம்பாலத்தின் ஒட்டுமொத்த பணிகளில் சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ரயில்வே துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ரயில்வே நிர்வாகத்திடம் உரிய முறையில் பேசி, சுமார் 34.10 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று, கோட்டை ரயில்வே மேம்பாலத்தின் இருமுனை சாலைப் பணிகளை தீவிரமாக செய்து வருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் ரயில்வே தரப்பிலோ, தங்களுக்கு தாமதமாகத்தான் அனுமதி கிடைத்ததாகவும், 2 ஆண்டுகள் ஒப்பந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் காலக்கெடுவுக்குள் பணிகளை முடித்துவிடுவோம் என்றும் மழுப்பலாக பதில் அளிக்கின்றனர்.

அதிகாரிகளின் இந்த மெத்தனமான செயல்பாடுகளால் 2023-இல் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் எனத் தெரிகிறது. அதாவது 2027-ஆம் ஆண்டில் தான் இந்த பாலம் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் மையப்பகுதியில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் ஒரு முக்கிய பாலத்தின் பணிகளை இவ்வளவு மெத்தனமாக கையாள்வது நியாயமே இல்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த இழுபறிக்கு ஒரு எண்ட் கார்டு போட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Hashtags: #TrichyInsight #TrichyNews #MarisTheatreBridge #TrichyTraffic #FortStation #TrichyCorporation #Chathiram #Thillai Nagar #BridgeConstruction #TrichyUpdates #LocalNews #TrendingTrichy

Socials: Handles:

@trichyinsight @trichyinsight