Trichy Gandhi Market Farmers Request to CM Vijay | Trichy Insight
திருச்சி காந்தி மார்க்கெட்டில் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க வரும்போது, பார்க்கிங் மற்றும் மூட்டைகளுக்கு அநியாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள திருச்சி மாவட்ட விவசாயிகள், இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாநகரின் மையப்பகுதியான காந்தி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தங்களின் விளைபொருட்களை அறுவடை செய்து, அதிகாலை, காலை, மாலை என ஒரு நாளைக்கு சுமார் 3 முதல் 4 முறை மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகளிடம் பல்வேறு பெயர்களில் அநியாயக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விவசாயிகளை வாட்டி வதைக்கும் கட்டண விபரங்களை பொறுத்தவரை, இருசக்கர வாகன பார்க்கிங் கட்டணமாக 17 ரூபாயும், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் விளைபொருட்களை ஒப்படைக்கச் செல்லும் வழியில் ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விவசாயிகளின் வேதனைப் புயல்: "நாங்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, அதைச் செப்பனிட்டு, பயிரிட்டு, காலத்திற்கேற்ப உரமிட்டு, பூச்சி மருந்து அடித்து, இயற்கைச் சீற்றங்களிடம் இருந்து தப்பித்து, வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்து, கஷ்டப்பட்டு அறுவடை செய்கிறோம். அதை மூட்டையாகக் கட்டி எங்கள் சொந்த இருசக்கர வாகனங்களிலேயே சுமந்து கொண்டு வந்தால், உழைத்த எங்களுக்கு லாபம் கிடைப்பதற்கு முன்பாகவே இப்படிப் பல வழிகளில் 'கப்பம்' கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
நாளொன்றுக்கு 3-ல் இருந்து 4 முறை மார்க்கெட்டுக்கு வந்து செல்லும் ஒரு விவசாயி, ஒவ்வொரு முறையும் பார்க்கிங் கட்டணமும், கொண்டு வரும் அத்தனை மூட்டைகளுக்கும் தலா 10 ரூபாயும் கட்டினால், அன்றைய நாளின் கூலி கூட கையில் மிஞ்சாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்ததில் இருந்து, முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9:30 மணிக்கே தலைமைச் செயலகம் வந்து ஒவ்வொரு துறையாக அதிரடி ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அவல நிலைக்கு அவர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என திருச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காந்தி மார்க்கெட்டில் விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் இந்த அநியாயக் கட்டண முறையை ரத்து செய்து, விளைபொருட்களைக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
Hashtags: #TrichyInsight #TrichyNews #GandhiMarket #TrichyFarmers #CMVijay #TVKGovernment #FarmersGrievance #TrichyDistrict #AgricultureNews #SaveFarmers
Socials: Handles: @trichyinsight @trichynews